நான் யோகா செய்தது கிடையாது, ஏனென்றால் என் பெற்றோருக்கு அது பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது.
என் குழந்தைக்கு 'ஜெய் அனுமன்' தெரியும்.. சூப்பர் மேன் பற்றி தெரியாது!

நான் யோகா செய்தது கிடையாது, ஏனென்றால் என் பெற்றோருக்கு அது பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது. தெரிந்திருந்தால் நானும் உடலை கட்டுப்பாடோடு வைத்திருந்திருப்பேன் என நடிகை நமிதா தெரிவித்தார்.
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி இன்று (ஜூன்.21) நடைபெற்றது. இதில் தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக நடிகை நமீதா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். சிறப்பாக யோகா செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
பின்னர் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''உலகம் முழுவதும் 170 நாடுகளில் இன்று யோகா நாள் கொண்டாட பிரதமரே காரணம். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். யோகா செய்தால் மகிழ்ச்சி உண்டாகும், வாழ்க்கை மேம்படும். அது போல டிசம்பர் 21 தியான தினமாக கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அதன் நோக்கம் நாம் அனைவரும் உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்பது தான்'' என அவர் கூறினார்.
தாய்மொழி தான் முக்கியம்
அதனை தொடர்ந்து பேசிய நடிகை நமீதா, ''யோகா 5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்டது. 2007-ல் பாலிவுட் நடிகை கரீனா கபூர் யோகா மூலம் உடலை கட்டுப்பாடோடு வைத்த பின் தான் எங்கள் பல பேருக்கு யோகா பற்றி தெரிய வந்தது. கடந்த 10 ஆண்டாகத் தான் யோகா பிரபலமாகி வருகிறது. ஆங்கிலம் தெரிந்திருப்பது நல்லது தான். ஆனால், அதற்கு முன் கண்டிப்பாக தாய்மொழி தான் முக்கியம். என் குழந்தைகளுக்கு தமிழ், தெலுங்கு, குஜராத்தி தெரியும். ஏனென்றால் அது அவர்கள் தாய்மொழி.
பெற்றோருக்கு புரிதல் இல்லை
என் குழந்தைக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் பற்றி தெரியாது, ஆனால் நிச்சயமாக 'ஜெய் அனுமன்' தெரியும். என் குழந்தைகளுக்கு அனுமன் என்றால் மிகவும் இஷ்டம், இதை நான் பெருமையாக தெரிவித்துக் கொள்கிறேன். என் குழந்தைகளுக்கு நான் யோகா, சிலம்பம் உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுக்கிறேன்.
நான் யோகா செய்தது கிடையாது, ஏனென்றால் என் பெற்றோருக்கு அது பற்றின புரிதல் இல்லாமல் இருந்தது. தெரிந்திருந்தால் நானும் உடலை கட்டுப்பாடோடு வைத்திருந்திருப்பேன். என் குழந்தைகளோடு நான் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை. என் தாய் மொழியில் தான் பேசுகிறேன்'' என தெரிவித்தார்.