உலகம் பூராவும் இஸ்ரேல் மீதான மக்களின் வெறுப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது!
காஸா இனப்படுகொலையை எதிர்த்து பல பேரணிகள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

காஸா படுகொலைக்குப் பின் உலகம் பூராவும் இஸ்ரேல் மீதான மக்களின் வெறுப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. காஸா இனப்படுகொலையை எதிர்த்து பல பேரணிகள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
பிரான்ஸ், பிரித்தானியா, இப்போ ஜேர்மனி என ஆட்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஏதோ முனகுவதற்கு இந்த எதிர்ப்புப் போராட்டங்கள்தான் காரணம். அது அவர்களின் பிழைப்புவாதமாக இருக்கலாம். ஆனால் இந்த விடயத்தில் நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் நாடுகள் போற்றத் தக்கவை. அவை ஏற்கனவே பலஸ்தீனத்துக்காக குரல் கொடுத்து வருபவை. ஐரோப்பிய ஒன்றியத்தில் அயர்லாந்து காஸா படுகொலையை எதிர்த்தும் சியோனிச இஸ்ரேலை கண்டித்தும் அரசியல் ரீதியாக கிழித்து தொங்கவிட்டுக் கொண்டே இருப்பவர்கள்.
ரசியாவுக்கு விதித்த 27000 பொருளாதாரத்தடையுடன் இன்னும் இன்னுமாய் 17, 19 என கொசுறு கொசுறாய் கூட்டுகிற இந்த ஒன்றியம் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தடையைத் தன்னும் ஏவியதில்லை. மாறாக இஸ்ரேல் தன்னை பாதுகாக்கும் உரிமை உடையது என காஸா மக்களின் புதைகுழிமேல் நின்று சங்கு ஊதுவது இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இப்போ இஸ்ரேல் ஈரான் மீது வலிந்து தொடுத்த தாக்குதலின்போது ஈரான் தன்னை பாதுகாக்கும் உரிமை கொண்டது என்பதை சொல்ல அவர்கள் தயாராக இல்லை. மாறாக ஏதோ ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கிறதாக மாற்றி மொழிபெயர்த்து, அதனடிப்படையில் இஸ்ரேல் தன்னை பாதுகாக்கும் உரிமை உடையது என அதே சங்கை மீண்டும் ஊதுகிறார்கள். இதுதான் அவர்களின் மேக் அப் ஜனநாயகம்.
ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ், ஹவுதி அமைப்புகளை சுட்டிக் காட்டி ஈரான் பயங்கரவாதிகளை வளர்ப்பதாகவும், மத அடிப்படைவாதிகளை வளர்ப்பதாகவும் சொல்லும் மேற்குலகமும் அதன் இரைச்சலுக்குள் அகப்பட்டவர்களும் ஒன்றை மறைக்கிறார்கள். அந்த மூன்று அமைப்புகளும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இருப்பவர்கள். மத அடிப்படைவாதிகளல்ல.
யார் மத அடிப்படைவாத அமைப்பினராக வெறியாட்டம் ஆடியவர்கள்/ஆடுபவர்கள் என்ற உண்மையை ஏன் மறைக்கிறார்கள். அல் கைடா, ஐஎஸ்ஐஎஸ், பொக்கோ கராம் போன்ற மத அடிப்படைவாதிகள்/பயங்கரவாதிகளை உருவாக்கியவர்கள் அமெரிக்காவும் பிரித்தானியாவும்தான் என்பது வரலாறு. இவர்களே ஏகாதிபத்தியத்துக்கு விளக்கு பிடித்தவர்கள். பிறகு இந்த வளர்த்த கடாவில் ஒரு பட்டி ஆடுகள் இந்த தோற்றுநர்களின் மார்பில் பாய்ந்த கிளை வரலாறும் உண்டு.
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மண்ணின் விளைபொருள் ஹமாஸ். இஸ்ரேலின் லெபனான் மீதான ஆக்கிரமிப்பின் விளைபொருள் ஹிஸ்புல்லாஹ். அவர்களது செயற்பாட்டில் விமர்சனங்கள் இருக்கலாம். இருக்கும். அது அவர்களை பயங்கரவாகிகள் எனவோ மத அடிப்படைவாதிகள் எனவோ அவதூறு சொல்ல போதுமானதல்ல.
1993 இல் ஐநா சபையால் 160 நாடுகளுக்கு மேல் வாக்களித்த two state (பலஸ்தீனம், இஸ்ரேல்) தீர்வை இஸ்ரேல் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக பலஸ்தீன மண்ணை மட்டுமன்றி சிரியா, லெபனான் நாடுகளின் எல்லை தாண்டி ஆக்கிரமிப்பு செய்து அகண்ட இஸ்ரேல் என்ற one state தீர்வினை சாதிக்க வெறியாட்டம் ஆடிவருகிறது. ஈரானும் ஹமாஸ் உம் மறுபக்கத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிக்க தயாராக இல்லை. இந்தப் போக்கை இரு தரப்பும் தொடர்ந்தால் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமே இல்லை.
பெரியண்ணனின் நிழலில் மத்திய கிழக்கின் சண்டியனாக வெறியாட்டம் ஆடிய இஸ்ரேலின் பிம்பத்தை எவரும் எதிர்பாராத விதத்தில் ஈரான் அடித்து நொருக்கியிருக்கிறது. இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்கு எதிரான உலக மக்களின் குரல் பல நாடுகளின் ஆட்சியாளர்களால் உதாசீனம் செய்யப்பட்ட தொடர் கோபத்திலிருந்த மக்கள் இஸ்ரேலின் மீதான ஈரானின் உச்சந்தலை அடியை கொண்டாடுகிறார்கள். இது நசுக்கப்பட்ட அல்லது அரசுகளால் செவி மடுக்கப்படாத தமது மனிதாபிமானம் சார் குரலினதும் மனித அறத்தினதும் தோல்வியிலிருந்து எழுந்திருக்கிற உளவியல்.
ஈரான் இந்த ஆதரவினதும் தமது அதி தாக்குதல் பலத்தினதும் நியாயமான திமிருடன் two state தீர்வை முன்வைத்து மேசைக்கு வர வேண்டும். உலக நாடுகள் ஐநா இனால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட two state தீர்வின் அடிப்படையில் பேச இஸ்ரேலை மேசைக்கு இழுத்து வர வேண்டும். இல்லையேல் ஈரானின் தாக்குதல் வெற்றிப் படியில் ஏறப் போவதில்லை. இந்த சந்தர்ப்பம் இனி வருமா தெரியாது.
இரு நாடுகளும் தரைப்படை கொண்டு மோத நிலத் தொடர்பு இல்லை. எனவே இராணுவ ரீதியாக எவரும் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. மூலைமுடுக்கெல்லாம் (சுமார் 750) இராணுவத் தளங்களையும் ஈரானைச் சுற்றி மத்தியகிழக்கு நாடுகளில் அடிவருடிகளையும் கொண்டுள்ள பெரியண்ணன் புகுந்தால் எல்லாம் நாசமாகும். அண்ணனுக்கு நிலத் தொடர்பு எதுவும் தேவையில்லை என்பதை கவனம் கொள்ள வேண்டும். இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரல் வழி அண்ணன் ஈராக்கினுள் உள்ளட்டதைப் போல, ஈரான் அணுகுண்டுக்கு திரி வைப்பதுதான் பாக்கி என சொல்லி உள்ளட நேரமாகாது. எனவே ஈரான் காலத்தைக் கைப்பற்ற வேண்டும்.
பொருளாதார வீழ்ச்சியும், 2027 இல் சீனாமீது போர் தொடுப்பதற்கான தயாரிப்புகள் காய்நகர்த்தல்கள் எனவும் சிக்குப்பட்டு நிற்கும் அமெரிக்கா நெத்தன்யாகுவின் இந்தப் போருக்குள் உள்ளடுமா என்ற சந்தேகத்தையும் சொல்லி வைக்க வேண்டியிருக்கிறது. அதேநேரம் இஸ்ரேலின் அழிவை அது ஒருபோதுமே சகித்துக் கொள்ளாது என்பதால் ஈரானின் இராஜதந்திர நகர்வு அவசியமானது. சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்றெல்லாம் ஈரானின் தாக்குதலைக் காட்டி உசுப்பேத்தும் கதைகள் ஒன்றுக்குமே உதவாது!.
இரவீச்திரன்.பா