அடுத்த 5 ஆண்டுகளில் AI என்னென்ன செய்யப் போகிறது? அமைச்சர் !
மருத்துவர் இல்லாமல் AI எப்படி பயன்படுத்த முடியும்? AI மனிதர்கள் இடத்தை நிரப்ப நினைக்கிறதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் தேட வேண்டியுள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகள் இல்லாத வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் மிகப்பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி சான்றிதழ்களை வழங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது:
தொழில்நுட்பத்துறையில் கணினி கண்டுபிடிக்கப்பட்டது ஒருகாலத்தில் மிகப்பெரிய மைல் கல்லாக இருந்தது. அதுதான் தொழில்நுட்பத்துறையில் பல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் நாம் அடைந்துள்ளோம். அன்றைக்கு கணினி எப்படி வந்து மாற்றத்தை ஏற்படுத்தியதோ, அப்படித்தான் இப்போது ஏஐ வந்திருக்கிறது. இதுவும் தொழில்நுட்பத்துறையிலும், நமது அன்றாட வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கு முன்பு நாம் அடைந்த வளர்ச்சிக்கும், இந்த ஏஐ தொழிநுட்பத்தால் நாம் அடையப் போகும் வளர்ச்சிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஏஐ மூலம் எண்ணற்ற தரவுகளை (data) வைத்துக் கொள்ளலாம். உங்களிடம் நல்ல திட்டம் அல்லது புதிய யோசனை இருந்தால் ஏஐ மூலமாக அதனை பெரிய அளவில், பொருள் செலவு செய்யாமல் உங்களால் சோதனை செய்து பார்க்க முடியும்.
இதனால், நிச்சயமாக இதுவரை இல்லாத அளவில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட உள்ளது. கடந்த 3 முறையை காட்டிலும், தற்போது வந்துள்ள ஏஐ அதிக தரவுகளை தருகிறது. அதேபோல் இதில் பல சிக்கல்களும் உள்ளன. மருத்துவத்துறையில் மருத்துவர் இல்லாமல் ஏஐ எப்படி பயன்படும்? AI மனிதர்கள் போலவே செயல்பட நினைக்கிறது. அதே நேரத்தில், அது மனிதர்களை மிரட்டுகிறதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் நாம் பதில் தேட வேண்டியுள்ளது.
ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். தற்போது உள்ள கல்வித்துறையிலும், வேலைகளிலும் ஏஐ முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் தொடர்ந்து உங்களை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற மாற்றங்களை விட, அடுத்த 5 ஆண்டுகளில் மாற்றங்கள் அதிக அளவில் நடைபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என பழனிவேல் தியாகராஜன் கூறினார்.