தாய்லாந்தில் 6 தங்கம் உட்பட 11 பதக்கங்கள் வென்ற இலங்கை மெய்வல்லுநர்கள் நாடு திரும்பினர்!
,

தாய்லாந்தின் பெத்தும் தானி விளையாட்டரங்கில் நடைபெற்ற தாய்லாந்து பகிரங்க சுவட்டு மைதான சம்பயின்ஷிப்பில் 6 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் மொத்தம் 11 பதக்கங்களை வென்ற இலங்கை மெய்வல்லுநர்கள் வியாழக்கிழமை (26) நாடு திரும்பினர்.
தாய்லாந்து பகிரங்க சுவட்டு மைதான சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 1500 மீற்றர் மற்றும் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் ருசிரு சத்துரங்க இரண்டு தங்கப் பதக்கங்களையும் பெண்களுக்கான நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் போட்டிகளில் நெத்மிகா மதுஷானி ஹேரத் இரண்டு தங்கப் பதக்கங்களையும் வென்றனர்.
ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் விக்னராசா வக்சனும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிமாலி லியனஆராச்சியும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வக்சனும் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிமாலி லியனஆராச்சியும், 400 மீற்றர் சட்ட வேலி ஓட்டப் போட்டியில் அயோமல் அக்கலன்கவும் பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் வத்சலா ஹப்புஆராச்சியும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
இது இவ்வாறிருக்க ஆண்களுக்கான முப்பாய்ச்சிலில் சவ்ரின் அஹமத் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இலங்கை அணியில் இடம்பெற்ற அமாஷா டி சில்வா (100 மீற்றர்) மாத்திரமே பதக்கம் வெல்லத் தவறினார்.
இலங்கை அணியினர் நாடு திரும்பியபோது படை அதிகாரிகளும் அவர்களது உறவினர்களும் வரவேற்றனர்.