தென்னைமரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்!
தெளிகருவிகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமை நேற்றைய தினம் (27) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் கலாநிதி சுனிமல் ஜெயக்கொடி அவர்கள் விசேடமாக கலந்து கொண்டு கருத்துதெரிவிக்கையில், தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கம் தொடர்பான பிரச்சினை ஒரு தேசிய பிரச்சினையாக உள்ளதாகவும் கிருமிநாசினி கொல்லிகளை பயன்படுத்தி இப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளதாகவும், எனவே இப் பிரச்சினைக்கு தெளிகருவிகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இத் திட்டத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் இரு வாரங்களுக்கு யாழ் மாவட்டத்தில் வெள்ளை ஈ தாக்க ம் அதிகமாக இனங்காணப்பட்ட சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் கூடியளவிலான அதிக வலுவுள்ள தெளிகருவிகள் மூலமாக தென்னை மரங்களை கழுவும் செயற்பாட்டை வினைத்திறனாக முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இப் பாரிய செயற்பாட்டை முன்னெடுக்க அனைத்து சமூகங்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த, அரசாங்க அதிபர் அவர்கள், இவ் வெள்ளை ஈ தாக்கம் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகவும், வெள்ளை ஈ தாக்கம் அதிகமாக இனங்காணப்பட்ட சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் - முதற்கட்டமாக சாவகச்சேரி மற்றும் கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இடங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக தென்னை பயிர்ச் செய்கை சபையின் ஒத்துழைப்புடன் குறைந்தளவிலான தெளிகருவிகள் மூலமாக தென்னை மரங்களை சுத்தப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மற்றைய பத்து பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இத் தாக்கம் தொடர்பான நிலமைகள் தொடர்பாக வும், தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் எதிர் வரும் 14 ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்படவுள்ள கட்டுப்படுத்தல் செயற்பாட்டிற்கு தேவையான ஆளணி மற்றும் இதர தேவைகள் தொடர்பான உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடி விரைவான விபரங்களைஇரு வாரங்களுக்குள் அறிவிப்பதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.மேலும், தென்னை மரங்களை வெள்ளை ஈ தாக்கத்திலிருந்து பாதுகாக்க உரிய செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ள தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு தமது நன்றியினையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் பிரதி பொதுமுகாமையாளர் திரு. என்.எஸ் .ஜெயலத், உதவிப் பொது மேலாளர் திரு. தே.வைகுந்தன், பிராந்திய முகாமையாளர் திரு ஈ.சற்குணன், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், சாவகச்சேரி பிதேச செயலாளர்,கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண உதவிப் பிரதேச செயலாளர்கள், நல்லூர் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்,