யாழ். தையிட்டி விகாரை அகற்றப்படாது என்பதே நிச்சயம்!
கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் காலத்தில் இந்த விகாரை அமைக்கப்பட்டது என இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது.

‘தையிட்டி’ முடிவு இருக்கும் போதே போராட்டம் நடக்கின்ற விடயமாக இருந்து வருகிறது. அதாவது, கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினால் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை என்கிற தையிட்டி விகாரை ஒருபோதும் இடித்து அழிக்கப்படப்போவதில்லை. வேறு இடத்துக்கு மாற்றப்படப் போவதுமில்லை.
அவ்வாறிருக்கையில் விகாரை அமைக்கப்பட்டிருக்கும் காணியை விடுவிக்கும்படி போராட்டம் நடத்துவதே தேவையற்ற விடயமாகும் என்பதே யதார்த்தமானது.
கடந்த ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள.
தமிழ் மக்களின் காணிகளில் இருந்து ‘விடுவிக்கக்கூடிய’ ஒவ்வொரு அங்குல காணியையும் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அவருடைய பேச்சின் கருத்து என்னவென்று எல்லோருக்கும் புரிந்தாலும் அதற்கு விளக்கம் கொடுப்பதானால் விடுவிக்கக்கூடியவை என அவர்கள் நினைக்கும் அல்லது தீர்மானிக்கும் காணிகள் மாத்திரம்தான் விடுவிக்கப்படும் மற்றையவைகள் அல்ல என்பதாகவே இருக்கிறது.
இந்த நிலையில்தான், தையிட்டி விகாரைக்கு இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட காணிக்குப் பதிலாக ‘மாற்றுக் காணி அல்லது இழப்பீடு’ வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
விகாரை அமைக்கப்பட்ட காணிக்கு உரிமை கோருவோர் தங்களுடைய காணிக்கு மாற்றுக்காணி கோரவும் இல்லை அதற்கு இழப்பீடு வழங்கும்படி அரசாங்கத்தைக் கேட்கவுமில்லை என்றிருக்கையில் இந்தவிதமான அறிவித்தலொன்று வெளிவந்திருக்கிறது.
தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் (ONUR), தையிட்டி விகாரை குறித்த அறிக்கையை நீதி அமைச்சரிடம் ஒப்படைத்ததையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியின் உரிமையாளர்கள் நடத்திவரும் காணி உரிமைக்கான போராட்டத்தின்போது,
அரசாங்கத்தின் மாற்று காணி அல்லது இழப்பீட்டுத் திட்டத்தை முற்றிலுமாக நிராகரித்து, தங்கள் பரம்பரைக் காணியை தங்களிடம் மீள ஒப்படைக்க வேண்டுமென கோரிவருகின்றனர்.
ஜூன் 12ஆம் திகதி, வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,
தையிட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையின் காணி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையைத்தீர்க்க, பௌத்த விகாரையை காணியில் இருந்து அகற்றுவதற்கான சாத்தியக்கூறு இல்லை.
விகாரைக்குரிய காணி ஒதுக்கப்படும். தமிழ் மக்களின் காணியில் விகாரை கட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டால், மாற்றுக் காணி அல்லது இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதே நேரம், “தையிட்டி பிரச்சினை இந்த பிரதேசத்தில் பெரிய ஒரு பிரச்சினை.
தையிட்டி பிரச்சினைக்கு இந்த மாதத்திற்குள் தீர்வினை வழங்கத் தீர்மானித்துள்ளோம். ஏனென்றால், தையிட்டி விகாரையை உடைக்க ஏலுமா? ஏலாது?. அப்படியாயின் ஒன்று,
விகாரைக்குரிய காணியை ஒதுக்கிவிட்டு, மிகுதிக் காணிகளை விடுவிப்பது. இந்த விடயம் அரச அதிபரிடம் ஒப்படைத்ததன் அடிப்படையில், பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பார்.
பின்னர் போய் பாருங்கள் காணி இருக்கிறதா என்று, காணி இருக்கின்றவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். மக்களின் காணிக்குள்
விகாரை அமைந்திருந்தால் அதற்கு மாற்றுக் காணிகள் அல்லது நட்டஈடு
வழங்க முடியும்” என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படியே இந்த மாற்றுக்காணி அல்லது இழப்பீட்டுத் திட்டம் வெளிவந்திருக்கிறது என்பதே நிலைமை.
2023ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் போராட்டம் நடத்திவரும் தமிழ் மக்கள், 16 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 150 பரப்பு காணியை இராணுவம் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தி திஸ்ஸா விகாரையை அமைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிவருகின்றனர்.
விகாரை அமைக்கப்பட்ட காணிக்குரிய உரிமையைக் கோருவோரில் ஒருவரான வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன் சாருஜன், அரசாங்கத்தின் இந்த மாற்றுக் காணி, இழப்பீட்டுத் தீர்மானத்தைக் கடுமையாக நிராகரித்திருக்கிறார்.
காணி உரிமையை உறுதிப்படுத்தும் மக்களுக்குக் காணி வழங்கப்படும் என, ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நீதி அமைச்சர் உறுதியளித்த விடயத்தை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன் சாருஜன் சுட்டிக்காட்டுகின்றார்.
திஸ்ஸ விகாரைக்கு காணி கையகப்படுத்தப்பட்டமை காரணமாகக் காணியை இழந்த அனைத்து குடும்பங்களும் கலந்துரையாடலின் போது, காணி மீதான தங்கள் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கிறோம். அமைச்சர் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி மக்களுக்குச் சொந்தமானது என்பதை
நாங்கள் உறுதிப்படுத்தினால், அது மக்களுக்கு வழங்கப்படும் என நீதி அமைச்சர் எங்களுக்கு உறுதியளித்தார். எங்களுக்கு எங்கள் காணி வேண்டும் என்றும்
பத்மநாதன் சாருஜன் கூறியிருக்கிறார்.
இந்த இடத்தில்தான், தமிழ் மக்களின் பாரம்பரிய காணி உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியமைக்கு அமைய, திஸ்ஸ விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகள் குறித்து கடற்றொழில் அமைச்சர் மற்றும் நீதி அமைச்சரின் கருத்துக்கள் முரண்படுகின்ற விடயம் கவனிக்கப்பட வேண்டும்.
இருந்தாலும், நடைபெறுவது தமிழ் மக்களுக்கு நன்மையாக இருக்கப்போவதில்லை என்பது மட்டுமே நிச்சயம்.
திஸ்ஸ விகாரை காணிப் பிரச்சினை தொடர்பான அனைத்து தரப்பினரையும் யாழ்ப்பாண நாக விகாரை சர்வதேச பௌத்த மையத்திற்கு வரவழைத்து ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு மத்தியஸ்த நிகழ்ச்சியை நடத்தியதாக 2025 ஜூன் முதல் வாரத்தில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.
காங்கேசன்துறையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் திகதி அன்று இடம்பெற்றது என இலங்கை இராணுவம் ஏப்ரல் 29ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் காலத்தில் இந்த விகாரை அமைக்கப்பட்டது என இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது.
இதற்கிடையில், பலாலி விமான நிலையத்திற்குத் தேவையான காணிக்கு மேலதிகமாக அந்தப் பகுதியில் இராணுவ முகாமை நடத்திச் செல்லவும் காணி அவசியம் என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடு என, ஜூன் 12ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.
எஞ்சிய காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாதுகாப்புத் தலைவர்களுக்கு அறிவித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதே நேரத்தில், பாதுகாப்புத் தரப்பினருடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி பலாலி விமான நிலையம் வருவதனால் அத்தியாவசியமாக அந்த விமான நிலையத்திற்குத் தேவையான காணியைத் தவிர்த்து, அதனைவிட இந்த பிரதேசத்தில் ஏதோ ஒரு இராணுவ முகாம் இருக்கத் தானே வேண்டும்.
அந்த இராணுவ முகாம் தவிர்த்து மற்றைய காணிகள் அனைத்தையும் விடுவிக்குமாறு மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தார்.
அதனை நான் சொல்லவில்லை ஜனாதிபதி மிகவும் தெளிவாகப் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டமைக்கமைய, பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் தனியார் காணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பலாலியில் விமானப்படைத் தளத்தை விரிவுபடுத்துவதற்காக வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுக்குச் சொந்தமான 1009.7 ஏக்கர் காணியை விமானப்படை ஏற்கெனவே ஓடுபாதைக்காகப் பயன்படுத்தி வருவதாக ஜனவரி 2025இல் ஜனாதிபதியிடம் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், அந்த காணியில் 643 தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் இருப்பதாகக் கூறியிருந்தார்.
இவ்வாறிருக்கையில்தான், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளில் இருந்து விடுவிக்கக்கூடிய ஒவ்வொரு அங்குல காணியையும் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால், தையிட்டி விகாரை அகற்றப்படாதிருக்கும் என்ற முடிவும் கிடைக்கும்.