தமிழர் பிரச்சினைகளை சர்வதேச சமூகம் உணரத்தலைப்பட்டிருக்கிறது!
சர்வதேசத்தின் பங்கேற்புடன்கூடிய சுயாதீன விசாரணைப்பொறிமுறை ஒன்றையே உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் முன்மொழியவேண்டும்

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் செம்மணி விஜயத்தை தமிழ் மக்களுக்கு சாதகமான சமிக்ஞையாகவே தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், அவ்விஜயம் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் பிரச்சினைகளை சர்வதேச சமூகம் உணரத்தலைப்பட்டிருக்கிறது என்பதையே காண்பிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை (23) நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் அரசாங்கம், எதிர்க்கட்சிகள், சிவில் சமூகம், பாதிக்கப்பட்டோர் எனப் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், யாழ் விஜயத்தின்போது செம்மணி மனிதப்புதைகுழியையும் சென்று பார்வையிட்டிருந்தார்.
இந்நிலையில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் செம்மணி விஜயத்தை தமிழ் மக்களுக்கு சாதகமான பச்சை சமிக்ஞையாகவே தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ள சிறிதரன், அவ்விஜயம் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் பிரச்சினைகளை சர்வதேச சமூகம் உணரத்தலைப்பட்டிருக்கிறது என்பதையே காண்பிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் இணையனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிராகரித்திருப்பதாகவும், இதிலிருந்து அரசாங்கம் மாறியிருப்பினும் இலங்கையில் ஆட்சிபீடமேறும் அரசாங்கங்களின் மேலாதிக்க சிந்தனை இப்போதும் மாறவில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிவதாகவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே உள்ளகப்பொறிமுறை ஊடாகவோ அல்லது கலப்புப்பொறிமுறை மூலமோ பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், சர்வதேசத்தின் பங்கேற்புடன்கூடிய சுயாதீன விசாரணைப்பொறிமுறை ஒன்றையே உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் முன்மொழியவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.