உள்ளகப்பொறிமுறைகள் ஊடாக எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை , ஆகையினால் சர்வதேசத்தின் பங்கேற்பு அவசியம்!
60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் நிலவரம் குறித்து உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வெளியிடவிருக்கும் அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் நிலவரம் குறித்து உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வெளியிடவிருக்கும் அறிக்கை மிகக் காத்திரமானதாக அமையவேண்டும் என வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அவ்வறிக்கையில் உள்ளகப்பொறிமுறைகள் ஊடாக எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை என்ற விடயமும், ஆகையினால் அதில் சர்வதேசத்தின் பங்கேற்பு அவசியம் என்ற வலியுறுத்தலும் உள்வாங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்ளகப்பொறிமுறை ஊடாக எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை என்றும், ஆகையினால் அதில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்றும் உயர்ஸ்தானிகர் அவரது அறிக்கையில் வலியுறுத்தவேண்டும்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பிரதம நீதியரசர், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடாத்தியதுடன் திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து, அங்கும் பலதரப்பட்ட குழுக்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
அதுமாத்திரமன்றி விஜயத்தின் நிறைவு நாளன்று கொழும்பில் நடாத்திய ஊடக சந்திப்பில், சர்வதேசத்தின் ஆதரவுடன் உள்ளகப்பொறிமுறையை வலுப்படுத்தவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வெளியிடவிருக்கும் அறிக்கை மிகக் காத்திரமானதாக அமையவேண்டும் என சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
'முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு தான் கோரப்பட்டிருந்தது.
இருப்பினும் அது நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், உள்ளகப்பொறிமுறை ஊடாக எதனையும் செய்யமுடியாது என்பதைப் பேரவை புரிந்துகொண்டது. அதனையடுத்து 2014 ஆம் ஆண்டிலேயே இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
'அதனைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் பேரவையின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே நாட்டில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டது.
அதன் விசாரணை செயன்முறைகளில் சர்வதேசத்தின் பங்கேற்பை உள்வாங்கக்கூடியவகையிலேயே அதற்குரிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அலுவலக செயன்முறைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பை உள்வாங்குவதற்கு எந்தவொரு அரசாங்கமும் இடமளிக்கவில்லை.
இவ்வாறானதெர்ரு பின்னணியில் இலங்கையின் உள்ளகப்பொறிமுறை ஊடாக எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை என்றும், ஆகையினால் அதில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்றும் உயர்ஸ்தானிகர் அவரது அறிக்கையில் வலியுறுத்தவேண்டும்' எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி இலங்கை விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தாமல், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, பாதுகாப்புச்சபை உள்ளிட்ட ஏனைய கட்டமைப்புக்களுக்குள் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.