கிருஷாந்தி கொலை வழக்கின் சட்டமருத்துவ அதிகாரி பெரேரா செம்மணியில்!
செம்மணிப் புதைகுழியில் இருந்து சிறு பொம்மை மீட்பு!

கிருஷாந்தி கொலை வழக்கில் சட்டமருத்துவ அதிகாரியாகச் செயற்பட்ட கிளி போர்ட் பெரேரா, செம்மணிப் புதைகுழிப்பகுதிக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தற்போது அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள சட்டமருத்துவ அதிகாரிகளுடனும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
கிருஷாந்தி கொலை வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதான பங்களிப்பை சட்டமருத்துவ அதிகாரி கிளி போர்ட் பெரேரா வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செம்மணிப் புதைகுழியில் இருந்து சிறு பொம்மை மீட்பு!
செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.06.25) புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதனுள் காணப்பட்ட நீல நிற பையையும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
பை மீட்கப்பட்ட புதைகுழியில் இருந்து சிறு பிள்ளைகள் விளையாடும் பொம்மை ஒன்றும் சிறு பிள்ளையின் காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட மேலதிக பணிகளின் போது மேலும் மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவை ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து காணப்படுவதால் , அவை எத்தனை என சரியான எண்ணிக்கை கூற முடியாது என தெரிவிக்கப்பட்டது.
அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினமும் மேலும் சில எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.