கச்சதீவை இந்தியாவால் ஒருபோதும் கைப்பற்ற முடியாது!
வடக்கில் இனவாதத்தைத் தூண்டும் தமிழ் ராஜபக்ஷக்கள் தோற்றம் பெற்றுவிட்டதாகவும் குற்றச்சாட்டு சொல்வதுயாரய்யா?

சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் கச்சதீவை இந்தியாவால் ஒருபோதும் கைப்பற்ற முடியாதென்று போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திலுள்ள மக்களின் காணிகள் எக்காரணத்துக்காகவும் வேறு நபர்களுக்கு ஒப்படைக்கப்படமாட்டதென்பதுடன், வடக்கில் இனவாதத்தைத் தூண்டும் தமிழ் ராஜபக்ஷக்கள் தோற்றம் பெற்றுவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று (29) விஜயம் செய்திருந்த அவர், அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
யாழ் சர்வதேச விமான நிலையத்தில் சில அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. இந்த அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளன.
இருந்தபோதும் அதற்கு முன்னர் எதிர்வரும் மாத இறுதிக்குள் விமான நிலையத்துக்கு வரும் மற்றும் செல்லும் பயணிகளுக்காக தற்காலிக இருப்பிடமொன்றை நிர்மாணிக்குமாறு விமான நிலைய தலைவர் உள்ளிட்ட பணிக்குழாமுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். அந்த நடவடிக்கைகள் ஒரு வாரத்துக்குள் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
யாழிலுள்ள அநேகமான காணிகளுக்கு உரிமையாளர்கள் இருக்கிறார்கள். சுமந்திரன் 2015 ஆம் ஆண்டளவில் ஆட்சியிலும் பங்குபற்றியிருந்தார். அந்த அரசாங்கத்தின் பிரபல அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால் அவர் எதனையும் செய்ததாக இல்லை. யுத்தக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்குச் சென்றிருந்த அகதியொருவரை கைதுசெய்ததும் குழப்பமடைந்து அரசாங்கத்தை விமர்சித்திருந்தார். அதன் பின்னர் நாங்கள் அவ்வாறு இல்லை என்பதையும் உறுதிபடுத்தியிருந்தோம்.
அரசாங்கம் என்ற அடிப்படையில் எங்களிடம் எவ்வித இனவாதமும் இல்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சகல மக்களின் உரிமைகளுக்காகவே செயற்படுகிறோம்.
வடக்கிலுள்ள காணிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதற்காக கைப்பற்ற வேண்டும். சுமந்திரன் போன்றோர் அவர்களின் மொழியையும் இன்றும் திருத்திக்கொள்ளவேண்டும். வடக்கு மக்களின் காணிகளை எதற்காக வேறு நபர்களுக்கு கொடுக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியே வடக்கில் வெற்றிக்கொண்டுள்ளது. அவர்கள் அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையை சந்தித்துள்ளதால் மிகவும் மோசமாக இனவாதத்தை பயன்படுத்துகிறார்கள். வடக்கில் தமிழ் ராஜபக்ஷக்களே தோற்றம் பெற்றுள்ளார்கள்.
கச்சத்தீவை மீண்டும் கையகப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு!
" சர்வதேச சட்டத்தின் பிரகாரம் சட்டப்பூர்வமாகவே கச்சத்தீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. எனவே, அதனை ஒருபோதும் மீள கையகப்படுத்த முடியாது" - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" எமது வடக்கு கடற்பரப்புக்குள் இந்திய ரோலர் படகுகள் சட்டவிரோதமாக நுழைகின்றன. இதனால் கடல்வளம் நாசமாக்கப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள சனத்தொகையில் 30 சதவீதமானோர் கடற்றொழிலையே நம்பி உள்ளனர். எனவே, இது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகும்.
தமிழ் நாட்டில் தேர்தலொன்று நெருங்கும்வேளை கச்சத்தீவு விவகாரம் ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தவறு எனவும், அதனை மீளப்பெறுவோம் என்றெல்லாம் கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு வாக்கு வேட்டை நடத்தப்படும். இது எந்நாளும் கூறப்படும் கதையாகும்.
எனினும், இந்திய வெளிவிவகார அமைச்சரும் சில நாட்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு கருத்தை வெளியிட்டுள்ளார். கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தவறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழக மீனவர்கள் ரோலர் படகுகள்மூலம் மீன்வளத்தை மட்டுமல்ல எமது கடல்வளத்தையும் நாசமாக்குகின்றனர். இந்நிலைமை தொடர்ந்தால் இன்னும் 15 - 20 வருடங்களில் எமது கடல்வளம் பாலைவனமாகிவிடும். அதேவேளை, இராஜதந்திர ரீதியில் - சட்டப்பூர்வமாக - சர்வதேச சட்டத்தின் பிரகாரமே இலங்கைக்கு கச்சத்தீவு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே, அதனை எவராலும் மீண்டும் கையகப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது."- என்றார்.