‘கோட்டா கோ கம’ போராட்டத்தளத்தின் மீதான தாக்குதல்- 43 பேருக்கு 1.22 பில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்கியதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ சுட்டிக்காட்டுகிறார்.
சட்டவிரோதமாக வழங்கப்பட்ட இழப்பீட்டை மீட்டெடுக்கவும், அழிக்கப்பட்ட சொத்துகளை முறையாக மதிப்பீடு செய்த பிறகு, சட்டப்பூர்வமாக இழப்பீடு வழங்க உத்தரவிடவும் கோரிக்கை!

2022 மே 09 அன்று காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ கம’ போராட்டத்தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் வெடித்த வன்முறையில் வீடுகள் மற்றும் சொத்துகள் எரிக்கப்பட்ட முந்தைய அரசாங்க அமைச்சர்களால் அரசாங்கத்திடமிருந்து சட்டவிரோதமாகப் பெறப்பட்ட இழப்பீட்டை மீட்டெடுக்க உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலரும் சட்டத்தரணியுமான டொக்டர் ரவீந்திரநாத் தாபரே தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை, நவம்பர் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (17) உத்தரவிட்டது.
இந்த மனுவில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் (ஓய்வுபெற்ற) இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி சவேந்திர சில்வா, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, முன்னாள் அமைச்சர்கள் டிரான் அலஸ் மற்றும் பிரசன்ன ரணதுங்க, தற்போதைய பதில் ஐ.ஜி.பி. பிரியந்த வீரசூரிய, தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, சட்ட மா அதிபர் மற்றும் 15 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மே 09, 2022 அன்று போராட்டக்களத்தில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை காரணமாக வீடுகள் மற்றும் சொத்துகள் அழிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 43 பேருக்கு முந்தைய அரசாங்கம் 1.22 பில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்கியதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பெப்ரவரி 05 அன்று பாராளுமன்றத்தில் கூறியதாக மனுதாரர் சுட்டிக்காட்டுகிறார்.
இதனால் பொது நிதி கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய மனுதாரர், இயற்கை பேரழிவு ஏற்பட்டாலும் சொத்துகளை அழித்ததற்காக ஒரு நபருக்கு அதிகபட்ச இழப்பீடு 2.5 மில்லியன் ரூபா என்று கூறினார்.
இந்தப் பணம் உரிய சட்ட நடைமுறைக்கு புறம்பாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.
எனவே, சட்டவிரோதமாக வழங்கப்பட்ட இழப்பீட்டை மீட்டெடுக்கவும் சொத்துகள் அழிக்கப்பட்ட எம்.பிக்களின் சொத்துகளை முறையாக மதிப்பீடு செய்த பிறகு, சட்டப்பூர்வமாக இழப்பீடு வழங்க உத்தரவிடவும் மனுதாரர் நீதிமன்றத்தை மேலும் கோரியுள்ளார்.