நல்லூர் திருவிழா காலத்தில் ஆலயத்தின் பின்புறமாகவுள்ள பருத்தித் துறை வீதியை திறந்துவிடுமாறு யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் விடுத்தகோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
வழமையான நல்லூர் பெருந்திருவிழா ஏற்பாடுகள் போலவே இம்முறையும் செய்ய தீர்மாம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழா காலத்தில் ஆலயத்தின் பின்புறமாகவுள்ள பருத்தித் துறை வீதியை திறந்துவிடுமாறு யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் விடுத்தகோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
நல்லூர் பெருந் திருவிழா காலங்களில் ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள பருத்தித்துறை வீதி மூடப்பட்டு ள்ளதால் சன நெரிசல் ஏற்படுவதாக கடந்த மாநகரசபை அமர்வில் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் நேற்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழா ஒழுங்கமைப்புகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றிருந்தது.
இதன்போது யாழ்.மாநகரசபை உறுப்பினர் நிஷாந்தன் உள்ளிட்ட சிலர், மேற்படி வீதியை முழுமையாக அடைக்கவேண்டாம் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.
மேலும் வீதியை மூடுவதால் சன நெரிசல் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர். அவ்வாறு நெருக்கடி நிலை உருவானால் ஆலய வளாகத்தில் இருந்து பருத்தித்துறை வீதியில் உள்ளநுழைவாயில் ஊடாக இருந்து மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் ஆலய அறங்காவலர்களால் தெரிவிக்கப்பட்டது.
இதனால் வழமையான நல்லூர் பெருந்திருவிழா ஏற்பாடுகள் போலவே இம்முறையும் செய்ய தீர்மானித்து கூட்டம் நிறைவுக்கு வந்தது. இதேவேளை கடந்த மாநகரசபை அமர்வில் வீதியை திறந்துவிடுமாறு உறுப்பினர்கள், கோரிக்கை விடுத்ததுடன், திருவிழா ஏற்பாட்டுக் கூட்டத்திற்கு தம்மை அழைக்குமாறும் கேட்டிருந்தபோதும், மாநகரசபையில் பேசப்பட்ட அளவுக்கு நேற்றைய கூட்டத்தில் பேசப்படவில்லை.
மேலும் கடந்த ஆண்டு நல்லூர் மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழாவின்போது சனநெருக்கடி ஏற்பட்டு தள்ளுமுள்ளாகி பக்தர்களால் பருத்தித்துறை வீதி தடை உடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.