சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலை,கிளிநொச்சியில் போராட்டம்!
சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலையில் போராட்டம்!

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலை -வெருகல் பூநகர் பகுதியில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது.
இதன் போது சுலோகங்களை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக வடக்குகிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், மத சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வட கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டாம் நாளாக வெருகல் பிரதேசத்தில் இவ் கவனஈர்ப்பு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சமஸ்டி ஆட்சி கோரி 100நாள் போராட்டம்- கிளிநொச்சியில் ஆரம்பம்!
சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100நாள் போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி இன்றையதினம் முதலாவது நாளாக கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுத்தரும் நோக்கில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது பல்வேறு மட்டங்களிலும் தனது செயல்பாட்டை முன்னெடுத்துவருகின்றது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் திகதி அடையாளப்படுத்தப்பட்ட 100 நாள் செயல்முனைவு என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்திற்குள் மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வினை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக 2025ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் திகதி (இன்று) தொடக்கம் கார்த்திகை மாதம் 08ஆம் திகதி வரை தொடர்ச்சியான 100 நாட்களும் சுழற்சி முறையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி முதல் நாளான இன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.