சோமரத்ன ராஜபக்சவின் உயிரை பாதுகாக்க வேண்டிய தேவை தற்பொழுது அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக தேவை ஏற்படும் சூழலில் சர்வதேச விசாரணைக்கு தயாராக இருப்பதாக கிருசாந்தி கொலை வழக்கின் குற்றவாளியான இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச!

கிருசாந்தி படுகொலை வழக்கின் குற்றவாளியாக தற்பொழுது சிறையிலிருக்கும் இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுர அரசாங்கத்திற்கு ஆகப்பெரும் ஒரு கறையாகவே அமையும் என தென்னிந்திய பிரபல இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கெளதமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக தேவை ஏற்படும் சூழலில் சர்வதேச விசாரணைக்கு தயாராக இருப்பதாக கிருசாந்தி கொலை வழக்கின் குற்றவாளியான இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச தனது மனைவி ஊடாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரியப்படுத்தியதன் மூலம் சிறையிலிருக்கும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சோமரத்ன ராஜபக்சவின் உயிரை பாதுகாக்க வேண்டிய தேவை தற்பொழுது அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் செம்மணியில் 135க்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளியில் தெரியப்படுத்தக்கூடிய ஒரே ஒரு முக்கிய சாட்சியமாக சோமரத்ன ராஜபக்ச மட்டுமே உள்ளார்.
செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் சிங்களவர்களாக இருக்கலாம் என தென்பகுதி அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
ஆனால் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளும் தமிழ்த் தேசியம் சார்ந்த அரசியல் பிரமுகர்களும், சிவில் சமூக அமைப்பினரும், சர்வதேச நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களும் கூறுகின்றனர்.
பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துகளை கூறிக் கொண்டிருக்கின்ற நிலையில் அதன் உண்மை நிலைப்பாட்டை, உண்மைத் தன்மையை வெளிப்படுத்தக் கூடிய உரிமை நேரில் அல்லது சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்தவர்களுக்கே உண்டு. அந்தவகையில் சோமரத்ன ராஜபக்ச ஒரு முக்கிய சாட்சியாக காணப்படுகின்றார்.
சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டால் அது முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஒப்பானதாகவே கருதப்படும். அது அநுர அரசாங்கத்தின் ஆட்சிக்கு ஆகப்பெரும் கறையை கட்டாயம் ஏற்படுத்தும்.
எனவே சர்வதேச விசாரணைகளுக்கான வாக்குமூலத்தை வழங்குவதற்கு குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச அனுமதிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிகள் விரைந்து சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலங்களை ஆவணப்படுத்த வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.