ரணிலின் உடல் நலம் தொடர்பில் வௌிவந்த புதிய தகவல்!
,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தீவிர வைத்திய கண்காணிப்பின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடலில் உள்ள குருதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதோடு ஏனைய பிற அறிகுறிகளும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் பல மணி நேரம் காத்திருந்தபோது மின்சாரம் தடைப்பட்டதாலும், நீண்ட நேரம் தண்ணீர் அருந்தாமையினாலும் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தீவிர வைத்திய மேற்பார்வையின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நான் இப்போதுதான் முன்னாள் ஜனாதிபதியைப் பார்த்தேன். அவருக்கு ஓரளவு நீர்ச்சத்து குறைபாடு இருந்திருக்க வேண்டும், அவரது இரத்தத்தில் சில மாற்றங்கள் மற்றும் பிற அறிகுறிகள் உள்ளன. எனவே, அவரை மூன்று நாட்கள் கடுமையான ஓய்வில் வைத்து, நீர்ச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்க வேண்டும்.நாம் அவ்வாறு செய்யாவிட்டால், இதயப் பிரச்சினைகள், சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் பிற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால்தான் அவர் தற்போது பல நிபுணர்கள் குழுவால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறார். இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் குணமடையாத போது, அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால் அந்த சிக்கல்கள் மேலும் தீவிரம் அடையலாம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.