குகேஷ் உலக சாம்பியன் பட்டத்தை இழப்பார் - அதிரடியாக சொன்ன அப்துசட்டோரோவ்
உஸ்பெகிஸ்தானின் கிராண்ட்மாஸ்டர் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் (Nodirbek Abdusattorov), நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த நடப்பு உலக செஸ் சாம்பியனான குகேஷ் குறித்து உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் அப்துசட்டோரோவ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். குகேஷ் விரைவில் சாம்பியன் பட்டத்தை இழப்பார் என்று அவர் கூறியுள்ளார்.
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு சார்பில், 'கிராண்ட் ஸ்விஸ்' செஸ் தொடரானது உஸ்பெகிஸ்தானில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் உலகச் சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், ஆர். பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பெறுவர்.
இதில் குகேஷ் ஏற்கெனவே உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில், அவர் நேரடியாக உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். இதனால் அவர் இத்தொடரில் தனது திறமையை வெளிப்படுத்தும் நோக்கில் மட்டுமே பங்கேற்றுள்ளார். அதே சமயம், நடப்பு சாம்பியனுடன் மோதும் போட்டியாளரை தேர்வு செய்யும் தொடராக கேண்டிடேட்ஸ் தொடர் இருப்பதால், இந்த கிராண்ட ஸ்விஸ் தொடரில் யார் வெற்றி பெற்று கேண்டிடேட்ஸ் சுற்றுக்கு முன்னேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உஸ்பெகிஸ்தானின் கிராண்ட்மாஸ்டரான நோடிர்பெக் அப்துசட்டோரோவ், நடப்பு உலக சாம்பியனான டி. குகேஷ் குறித்து கூறிய கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ஊடக குழுவானது, அப்துசட்டோவோவிடம் 'இத்தொடர் குறித்து உங்களின் கருத்து என்ன?' என கேள்வியெழுப்பியது.
அதற்கு பதிலளித்த அப்துசட்டோரோவ், குகேஷ் அடுத்த போட்டியில் தனது சாம்பியன் பட்டத்தை இழப்பார் என்று கூறியதோடு, தனது கருத்து சர்ச்சையானதா? என்றும் கேட்டார்.அப்துசட்டோரோவ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதுடன், பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது.
இந்நிலையில், கிராண்ட் ஸ்விஸ் தொடக்க நிகழ்ச்சியின் போது பேசிய குகேஷ், "அப்துசட்டோரோவ் முதலில் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதிபெற வேண்டும்" என்று தனது பதிலடியைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "நோடிர்பெக் அப்துசட்டோரோவ் ஒரு சிறந்த வீரர், அவர் மிகவும் திறமையானவர். ஆனால் இந்த தொடரின் மூலம் அவர் கேண்டிடேட்ஸ் சுற்றுக்கு மட்டுமே தகுதிபெற முடியும். எனவே உலக சாம்பியனாக மாற அவர் முதலில் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதிபெற வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய குகேஷ், "யாராக இருந்தாலும், நீங்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் உலக சாம்பியனாக இருக்கத் தகுதியானவர் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். உண்மையில் நான் இங்கு யாரையும் ஆதரிக்கவில்லை" என்றார்.இந்த தொடர் குறித்து பேசிய குகேஷ், "சமர்கண்டிற்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2023 ஆம் ஆண்டு உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சுற்று போட்டிகளுக்காக நான் இங்கு வந்தேன். தற்சமயம் மீண்டும் இங்கு வந்ததில் மகிழ்ச்சி. நான் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற வேண்டிய அவசியமில்லை என்றாலும், இது இன்னும் ஒரு சிறந்த தொடர் என்று நினைக்கிறேன். இது என்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்த கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரின் முதல் சுற்றில் உலக சாம்பியனான டி.குகேஷ் பிரெஞ்சு வீரர் எட்டியென் பக்ரோட்டை எதிர்த்து விளையாடவுள்ளார். அதே சமயம், மற்றொரு இந்திய வீரரான ஆர்.பிரக்ஞானந்தா அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஜெஃப்ரி சியாங்கை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.