பயங்கரவாதத் தடைச்சட்டம் இரத்து செய்யப்பட்டால் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம் - சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா எச்சரிக்கை
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த மாதத்தில் வரைவு செய்யப்படும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த மாதத்தில் வரைவு செய்யப்படும் என இதுதொடர்பில் ஆராய்ந்து புதிய சட்டமூலம் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் அதே நேரத்தில், திட்டமிடப்பட்ட குற்றச் சட்டத்தையும் முன்னிலைக்கு கொண்டுவர வேண்டும்.
திட்டமிடப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானது. அதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும், அதேநேரம் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தை தடுக்கும் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச்செய்வது என்பது எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட விடயமாகும். அதனால் செப்டம்பர் தொடக்கத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் வரைவை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.