நிர்மாணக்கைத்தொழில் சார்ந்த தரப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு
,

நிர்மாணக்கைத்தொழில் சார்ந்த தரப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்கள் குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிர்மாணச் சேவைகள் மற்றும் தொடர்புடைய பொருட்கள், மின்சார கேபிள்கள் ஏற்றுமதியிலிருந்து பொருளாதாரத்திற்கு பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தத் துறையை ஏற்றுமதித் துறையாக வளர்ப்பதில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், முன்மொழிவுகள் மற்றும் தீர்வுகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டது.
அரசாங்க நிர்மாணங்களுக்கு அப்பால் நிர்மாணக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான பொருளாதார சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த நாட்டில் நிர்மாணத் துறையில் ஏற்பட்ட ஒழுங்கற்ற தன்மை காரணமாக கடந்த காலங்களில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும், அதனை ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நிர்மாணத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க அரசாங்கம் எவ்வாறு தலையிட முடியும் என்பது குறித்தும் ஆராயப்பட்டது. தற்போது நிர்மாணத்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து துறைசார் பிரதானிகள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர்.
ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அபோன்சு , ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள், நிர்மாணத்துறை பிரதானிகள் மற்றும் மின்சார கேபிள் உற்பத்தித் துறை பிரதானிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர் .