நாடு முழுவதும் பல கோடி ரூபாய் கைவரிசை - இணையவழி மூலம் மோசடி.. சிக்கியது எப்படி?
.

ஆவடியில் இணையவழி மூலம் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாடு முழுவதும் இணையவழி மூலம் பல கோடி மோசடி செய்த 135 வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய நபர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஜெனட் டெய்சி (62). இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் இவரது கைப்பேசிக்கு மும்பை இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் பேசுவதாக தொடர்பு கொண்டு நபர், உங்களது பெயரில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டு அதன் மூலம் சமூக விரோத செயல்கள் நடைபெற்றுள்ளதாகவும், உங்களது வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிக்குமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.மேலும், அதனை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சோதனை செய்து வங்கிக் கணக்கில் உள்ள பணம் முறையானதா? அல்லது மோசடி பணமா? என்பதைக் கண்டுபிடிப்பார்கள் எனவும் கூறியுள்ளனர். பின்னர், அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அவர்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும், இதையடுத்து மேரி ஜெனட் டெய்சி அவர்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு ரூ.38 லட்சத்தை அனுப்பியதாகவும் கூறப்படுகிறதுஅதனைத் தொடர்ந்து, மேரிக்கு மும்பை இணைய வழி குற்றப்பிரிவிலிருந்து எந்த தகவலும் வரவில்லை எனத் தெரிந்ததும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். பின்னர், உடனடியாக மேரி ஜெனட் டெய்சி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரவீன்குமார் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இவ்வழக்கில் சென்னை, அண்ணாநகர் ஹெச் பிளாக், பொன்னி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிஜாய் (33) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் 13 வங்கிக் கணக்குகளை தொடங்கி சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் எனக் கூறி பொதுமக்களிடம் இருந்து பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளதும், இவர் மீது நாடு முழுவதும் 135 மோசடி வழக்குகளில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. தற்போது, அவரிடம் இருந்து கைப்பேசி, மடிக்கணினி, காசோலை, கிரிடிட் கார்டு உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்..