ஆயுதப் போராளிகளுக்கு இலக்கணமாக வாழ்ந்த ஊடகப் போராளி! யோகேந்திரநாதன் ஐயா.
.

வயது மூப்பு மற்றும் உடல் சுகயீனம் காரணமாக இன்று (29.12.2024) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமான ஈழத்தின் மூத்த படைப்பாளியும் ஊடகவியலாளருமான நாராயணப்பிள்ளை யோகேந்திரன் ஐயா ஆயுதப் போராளிக்கு இலக்கணமாக வாழ்ந்த ஊடகப் போராளியாக வரலாற்றில் நினைவுகூரப்படுவார்.தனது படைப்புகள் மூலம் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு வலுச்சேர்த்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டவர்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி கரணவாரயைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் கிளிநொச்சி – திருவையாறு தபாலகத்தின் உதவித் தபால் அதிபராகப் பணியாற்றியிருந்தார். 1960 களில் இலக்கியத்துறைக்குள் பிரவேசித்தார்.இலங்கை வானொலியில் நாடக எழுத்தாளராக பணியாற்றிய அவர், போர்க்காலத்தில் புலிகளின் குரல் வானொலியில் நாடக எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் கடமையாற்றினார். இக்காலத்தில் ஒலிபரப்பான உயிர்த்தெழுகை, உயிர் குடிக்கும் பறவைகள், சாம்பல் பறவைகள், காவல் வேலி போன்ற நாடகத் தொடர்கள் அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் மதிப்பை ஏற்படுத்தின.
1993 இல் ஈழநாதம் நாளிதழ் வன்னிப் பிராந்தியத்துக்கான பதிப்பை தொடங்கிய போது அதன் ஆசிரியராக பணியாற்றினார். 1995 வரை வன்னி ஈழநாதத்தின் ஆசிரியராக அவர் தொடர்ந்து பங்காற்றினார். யாழ்ப்பாணத்தில் “புதுவிதி” வார இதழின் கௌரவ ஆசிரியராகவும் செயற்பட்டிருந்தார்.மேலும் கண்ணீர் மழலைகள், விடுதலை முழக்கம் உட்பட பல தொடர் நவீனங்களை எழுதிய அவர் பல நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் உருவாக்கியிருந்தார்.
போர்க்காலத்தில் புலிகளின் குரல் வெளியீடாக “தொலை நோக்கி” என்ற நுல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் வெளியான பல பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகளை சந்திரசேகர ஆசாத், யோகேந்திரநாதன், விஷ்ணுபத்திரன், அக்கினீஸ்வரன் என்ற புனை பெயர்களிலும் நா.யோகேந்திரநாதன் என்ற இயற்பெயரிலும் எழுதியுள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைப் போரை ஆவணமாக்கும் பெருமுயற்சியில் அளப்பரிய பங்காற்றிய அவர் போரட்ட வரலாற்றை மையமாகக் கொண்டு நீந்திக் கடந்த நெருப்பாறு (முள்ளிக்குளத்திலிருந்து கிளிநொச்சி வரை), நீந்திக் கடந்த நெருப்பாறு (கிளிநொச்சியில் இருந்து புதுமாத்தளன் வரை), மரண மழையில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்ற நாவல்களைப் படைத்திருந்தார்.
கடும் சுகயீனத்தால் பாதிக்கப்பட்டிருந்த வேளையிலும் ஆனையிறவை விடுதலைப் புலிகள் வெற்றிகொண்ட வரலாற்றை வெளிப்படுத்தும் விதமாக “39 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு” என்ற நாவலை அண்மையில் வெளியிட்டிருந்தார்.இடதுசாரிக் கொள்கையை மாறாத பற்றுடன் தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றிய அவர் சமூக இடக்குமுறைகளுக்கு எதிராக அளப்பரிய பங்காற்றினார். இதனால் பல்வேறு இன்னல்களுக்கும் அவர் முகம் கொடுத்திருந்தார். சமூக ஒடுக்குமுறையை வெளிப்படுத்தும் விதமாக “இடிபடும் இரும்புக் கோட்டைகள்” என்ற நாவலையும் இவர் படைத்திருந்தார்.
போர்க்காலத்தின் பின்னர் இவர் எழுPதிய 3 நாவல்கள் தேசிய ரீதியில் விருதுகளை வென்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான “காட்டு நிலா” என்ற வானொலி நாடகமும் நூலாக வெளியாகியிருந்தது.யோகேந்திரநாதன் படைத்துறை தவிர்த்து கூத்துக் கலைஞராக, அரங்க நாடக நடிகராக, வீதி நாடகத் தயாரிப்பாளராக, வானொலி நாடக தயாரிப்பாளராக, குரல் வழங்குராக, சிறந்த விமர்சகராக, பேச்சாளராக எனப் பல்துறை ஆளுமையாளராக மிளிர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தமிழ் தேசத்தையும், தமிழ் மக்களையும், தேசத் தலைமையையும் ஆழமாக நேசித்த மிகச் சிறந்த எழுத்தாளனாகவும் தத்துவாசிரியனாகவும்; ஊடகத்துறையில் கடந்த பல தசாப்தங்கள் பேராளுமை செலுத்திய, ஆயுதப் போராளிகளுக்கு இலக்கணமாக வாழ்ந்த ஊடகப் போராளி யோகேந்திரன் ஐயாவின் இழப்பு ஈழத்தின் இலக்கியத்துறையிலும் ஊடகத்துறையிலும் இட்டு நிரப்பமுடியா பேரிழப்பாகும்.ஊடகப் போராளி மூத்த படைப்பாளி நா.யோகேந்திரநாதன் ஐயா அவர்களின் இழப்பின் துயரில் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தினராகிய நாமும் பங்கெடுத்து அன்னாரின் ஆன்மாவுக்கு தலை சாய்த்து வணங்கி நிக்கிறோம்.யாழ் வடமராட்சி ஊடக இல்லம்.