மேலும் ஒரு உயிரைப் பறித்த 'நீட் தேர்வு' அச்சம்! சேலம் அருகே நிகழ்ந்த துயரம்!
நீட் தேர்வு அச்சத்தால் மார்ச் 31ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சேலம் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள பெரிய முத்தியம்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி செல்வராஜ், சந்திரா தம்பதியின் மகள் சத்யா (18). இவர் பன்னிரண்டாம் வகுப்பில் 562 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தார். இதனைதொடர்ந்து ஜலகண்டபுரம் பகுதியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து, கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 333 மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் கடந்த ஆண்டு சத்யாவால் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், அவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் சத்யா தனது பெற்றோரிடம் நீட் தேர்வுக்கு படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாகவும், மருத்துவ படிப்பில் சேர முடியுமா? முடியாதா? என்ற பயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோரும் படிக்க முடியவில்லை என்றால், வேறு ஏதேனும் படிப்பு தேர்வு செய்து படித்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் கூறியுள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து மருத்துவராக வேண்டுமென்ற தன்னுடைய ஆசை நிறைவேறாது என்று நினைத்து சத்யா மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இதனிடையே மன உளைச்சலில் இருந்த மாணவி சத்யா கடந்த மார்ச் 31ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு எடப்பாடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் நேற்று மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் உறவினர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. நீட் தேர்வு அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல:
சொந்தக் காரணங்களாலோ அல்லது மனஅழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.