3 ஓட்டங்களை இழந்து 5 விக்கெட்டுகளை வசமாக்கிய பாகிஸ்தான் வீரர்!
.

பாகிஸ்தான் (Pakistan) அணிக்கு எதிரான இரண்டாவது 20க்கு20 போட்டியில் சிம்பாப்வே அணி 57 ஓட்டங்களில் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
இங்கு, பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளராகிய சுபியான் 3 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி, ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் முதல் 20க்கு20 போட்டியிலும் வெற்றி பெற்றது.
இந் நிலையில், தொடரை தீர்மானிக்கும் இரண்டாவது 20க்கு 20 போட்டியில், இன்று முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் பிரியான் பெண்ணட் 14 பந்துகளில் 21 ஓட்டங்களை எடுத்தார். மற்றொரு ஆரம்ப வீரராகிய டடிவானாசி மருமாணி 16 ஓட்டங்களை பெற்றார்.
ஆயினும், இதனை எத்து களம் இறங்கிய மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.இந் நிலையில், 58 ஓட்டங்களை பெற்றால், வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானிய அணி, 5.3 ஓவர்களில் வெற்றி இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டி தொடரை வென்றது.
அதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது 20க்கு 20 போட்டி வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து எதிர்வரும் பத்தாம் திகதியன்று, பாகிஸ்தானிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று 20க்கு 20 போட்டிகள், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.