நெஞ்சில் ஓர் ஆலயம்’ பட வெற்றியின் ரகசியம்
படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த கண்ணதாசனின் கேள்வி!

பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம். 1962 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் முத்துராமன், தேவிகா, கல்யாண்குமார், வி.எஸ்.ராகவன் முதலானோர் நடித்திருந்தனர். பூர்வ ஜென்மத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் அந்த காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் கல்யாண்குமாரும் தேவிகாவும் காதலர்களாக தன் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க விதி அவர்களை பிரித்துவிடுகிறது. அதனால் புற்று நோயாளியான முத்துராமனை திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. அப்போது தன் கணவரின் உடல் நிலையை சரிசெய்ய மருத்துவமனைக்கு தேவிகா செல்ல அங்கு தன் முன்னாள் காதலரான கல்யாண்குமார்தான் மருத்துவராக இருக்கிறார்.இத்திரைப்படம், பெண்மை, கற்பு, கடமை, பெருந்தன்மை ஆகிய பல நற்குணங்களைச் சிறப்பாக எடுத்துக்காட்டுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன் எழுத ஒவ்வொரு பாடலும் முத்து முத்தாக அமைந்ததுதான் படத்தின் கூடுதல் சிறப்பு.அதனால் ஒரு சமயம் கண்ணதாசன் ஸ்ரீதரை பார்க்க சித்ராலயா ஸ்டூடியோவிற்கு செல்ல கண்ணதாசனிடம் ஸ்ரீதர் படத்தின் கதையை விளக்குகிறார். கதையை கேட்ட கண்ணதாசன் ‘கணவன் தான் இறந்த பிறகு தன் மனைவியை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதும் அதே கணவன் தனக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவரிடம் தன் மனைவியை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்பதும் நமது கலாச்சாரத்திற்கு எதிரானது. மக்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.’ என்று கூறியிருக்கிறார்.
அதற்கு ஸ்ரீதர் அப்போ நான் என்ன செய்வது என கேட்க ‘கொஞ்சம் யோசித்துப் பார்’ என்று சொல்லிவிட்டு சென்றாராம். அதன் பிறகு தன்னுடைய புரட்சிகரமான கருத்தும் படத்தில் இருக்க வேண்டும். கண்ணதாசனின் கேள்விக்கும் பதில் இருக்க வேண்டும் எனக் கருதிய ஸ்ரீதர் ஒரு புதிய காட்சியை உள்ளே சேர்த்தாராம். அதாவது தன் மனைவியிடம் கணவன் நான் இறந்த பிறகு நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என சொல்கிறார்.அதற்கு மனைவி ஷாக் ஆகிறாள். அழுகிறாள். ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் என கேட்கிறாள். அதற்கு அந்த கணவன் ‘தன் மகள் இளவயதிலேயே விதவையானால் அவள் பெற்றோர்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா? மறுமணம் செய்து வைக்கத்தான் முற்படுவார்கள். அதே போல் தன் தங்கை விதவையானால் ஒரு அண்ணனும் இந்த காரியத்தைத்தான் செய்வான். அதே போல்தான் நானும். ஒரு கணவனாக உனக்கு மறுமணம் செய்து வைக்க நினைக்கிறேன்’ என்று அந்த காட்சியில் இருக்கும்.இதை கண்ணதாசன் பார்த்துவிட்டு படம் நிச்சயம் வெற்றி என சொல்ல படம் எதிர்பார்த்ததையும் விட மாபெரும் வெற்றி. அதன் பிறகு ஸ்ரீதர் கண்ணதாசன் மட்டும் அந்த கேள்வியை கேட்காவிட்டால் அந்த புதிய காட்சியை என்னால் எடுத்திருக்க முடியாது என்றும் படமும் இந்தளவுக்கு வெற்றியடைந்திருக்காது என்றும் கூறியிருக்கிறார்.