தமிழரசு கட்சியுடன் மாத்திரமே எனது பயணம்: பொது வேட்பாளரின் அறிவிப்பு
.
தேர்தலின் பின்னர் தமிழரசுக் கட்சியுடன் மாத்திரமே பயணிப்பேன் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
“நமக்காக நாம்” என்ற தேர்தல் பிரசாரப் பணிக்காக வவுனியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போதே அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கடந்த கால இன்னல்களைத் தீர்ப்பதற்கான இலக்காகவும் அடையாளமாகவும் இந்த தேர்தல் இருக்குமென தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“மக்கள் நல்ல உத்வேகத்துடன் இருக்கின்றனர். கடந்த எட்டு ஜனாதிபதிகளாலும் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம், பல துன்பங்களைச் சந்தித்திருக்கின்றோம்.
கடந்த காலங்களில் பல போராட்டங்களைத் தமிழினம் கண்டுள்ளது. இது புள்ளடி போடும் ஒரு போராட்டம். அனைவரும் இந்த பணியினை உறுதியுடன் செய்ய வேண்டும்.
எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை உள்ளடக்கப்பட்டிருந்தது. அது பிரதி எடுக்கப்படும் போது தற்செயலாகவே விடுபட்டுள்ளது. அந்த விடயங்கள் இறுதிப் பிரசுரத்தில் நிச்சயம் உள்ளடக்கப்படும்.
அத்துடன், தேர்தலின் பின்னரும் நான் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் மாத்திரமே பயணிப்பேன். அதில் மாற்றுக் கருத்தில்லை. கட்சியால் என்னிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சந்தர்ப்பம் வரும் போது அதற்கான விளக்கத்தினை அவர்களுக்கு வழங்குவேன்” எனத் தெரிவித்துள்ளார்.


