வேலணை பிரதேச வருமான ஈட்டலில் பல கோடி நிதி மோசடி!
பொறுப்புக் கூறாது தட்டிக்களிக்கும் அதிகாரிகள்!
மண்டைதீவில் சுற்றுலா அமைச்சினால் அமைக்கப்பட்ட "எக்கோ ரூறிசம்" திட்டம் தோல்வியடைய அன்றிருந்த அரச அதிகாரிகளே காரணம் என குற்றம் சாட்டுயுள்ள வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் குறித்த அதிகாரிகளால் வேலணை பிரதேசத்திற்கு கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் -
வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016 ஆண்டு மண்டைதீவில் சுற்றுலா அமைச்சினால் அமைக்கப்பட்ட திட்டமே இந்த "எக்கோ ரூறிசம்" திட்டமாகும்.
இது 75 மில்லியனுக்கும் அதிக நிதி முதலீட்டில் செயலுருவாக்கம் பெற்றது.
ஆனாலும் முறையான பொறிமுறை திட்டவரைபு இல்லாமையால் அது அதன் நோக்கத்தில் தோல்வி கண்டுள்ளது.
குறிப்பாக திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னரே இறங்கு துறையை அமைப்பதற்காக 50 மில் லியன் ரூபா பெறுமதியான பொருட் களை இறக்குமதி செய்யபட்டது.
2016 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட குறித்த பொருட்கள் கடந்த பல வருட காலமாக வேலணை கடற்கரையில் பாவனையின்றி அழிந்துபோகும் நிலையில் இருக்கின்றன.
அதுமட்டுமல்லாது இத்திட்டம் தோல்வியடைந்து அல்லது மோசடிகளால் பாதிக்கப்பட்டதை அன்றிருந்த பிரதேச செயலர் மூடி மறைத்துவந்தார். அதன் பின்னர் மத்திக்கு குறித்த விடையம் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அது தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் அன்றிருந்த மாவட்ட செயலரும் இன்றைய ஆளுனருமான வேதநாயகன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முற்றாக மறைத்து தனது அதிகாரிகளை பாதுகாத்திருந்தார்.
அதுமட்டுமல்லாது அதிகாரங்களை பிரயோகித்து 2020 ஆம் ஆண்டு அந்த பொதுப்பை வேலணை பிரதேச சபையிடம் திணித்து பொறுப்பேற்கச் செய்தனர். அதன் பின்னர் 2024 இல் சபையால் தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.
ஆனால் இன்று அந்த இடம் கலாசாரச் சீரழிவுக்கு ஏற்ற இடமாக வலம்வந்து கொண்டிருக்கின்றது. இதனால் சபைக்கான வருமானமும் இல்லாது பிரதேசத்தின் விழுமியங்களும் சீரழிக்கப்பட்டு வரும் நிலைக்கு குறித்த சுற்றுலா தளம் சென்றுள்ளது.
எனவே இந்த திட்டத்தில் ஏப்பமிடப்பட்ட அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உண்மை கண்டறியப்பட்டு இழக்கப்பட்ட நிதியை மீட்டு சபையிடம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


