வடபுலத்தின் சுற்றுலாத் துறை சர்வதேச தரத்துக்கு இணை!
இயற்கை எழில் கொஞ்சும் இந்த வெள்ளை மணல் கடற்கரைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகள்.
எமது வடபுலத்தின் சுற்றுலாத் துறையை சர்வதேச தரத்துக்கு இணையாகக் கொண்டு செல்லும் அரசாங்கத்தின் தூரநோக்குச் சிந்தனைக்கமைய, காரைநகர் கசூரினா கடற்கரையை நவீன வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த வெள்ளை மணல் கடற்கரைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் ஆலோசனையின் கீழ் தற்போது முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கசூரினா கடற்கரையில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினரின் அவசரத் தேவைகளுக்காகவும், அவர்களது சேவையை மேலும் வினைத்திறனாக முன்னெடுப்பதற்காகவும் காரைநகர் பிரதேச சபையால் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அலுவலகத் தளபாடங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாவிகளுக்கு உடனடி உதவிகளையும் அதியுயர் பாதுகாப்பையும் வழங்கும் நோக்கில், கசூரினா கடற்கரைப் பகுதியில் பிரத்தியேகமான சுற்றுலாப் பொலிஸ் பிரிவை அமைப்பதற்கான புதிய இடம் அடையாளங்காணப்பட்டுள்ளது. மிக விரைவில் இப்பிரிவு முழுமையாகச் செயற்படத் தொடங்கும்.
சுற்றுலாவிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவதுடன், கசூரினா கடற்கரையை ஒரு முன்மாதிரியான சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே.விவேகானந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.


