தொல்பொருள் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க 'சிங்களவர் குழு'
பொலிஸ் தலைவர், முப்படைத் தளபதிகள் மற்றும் புலனாய்வுத் தலைவர்கள் உட்பட 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு 'முழு ஆண்கள்' குழு!
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிகள் மற்றும் வரலாற்று தளங்கள் தொடர்பாக சிங்களவர்களுக்கு மேலதிகமாக தமிழர்களும் முரண்படும் அதேவேளையில், தொல்பொருள் திணைக்களம் சிங்கள பௌத்தர்களுக்கு சாதகமாக செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அரசாங்கம் 19 சிங்கள உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி கையொப்பமிட்டு, 2025 நவம்பர் முதலாம் தகதி சனிக்கிழமை வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இல. 2460/56 இற்கு அமைய நியமிக்கப்பட்ட தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் பதவிக்காலம், 10.03.2025 முதல் 09.03.2027 வரை நடைமுறையில் இருக்கும்.
ஷியாமோபாலி மஹா நிகாயாவின் மல்வத்து மகா விகாரையின் பிரதம பதிவாளர் சங்கைக்குரிய வெண்டருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ இரத்தினபால உபாலி நாயக்க தேரர் தலைமையிலான குழுவில், ஷியாமோபாலி மஹா நிகாயாவின் மல்வத்து மகா விகாரையின் பிரதம பதிவாளர், சங்கைக்குரிய கலாநிதி பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக தேரர், கலாநிதி கவ்வெவ விமலகாந்த தேரர், பேராசிரியர் செனரத் திஸாநாயக்க, கௌரவ பேராசிரியர் ஜகத் வீரசிங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாராச்சி, களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் பேராசிரியர் மங்கள கட்டுகம்பொல, பேராதனை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் ஆர். எம். எம். சந்திரரத்ன, களனிப் பல்கலைக்கழக தொல்பொருள் துறை, மூத்த பேராசிரியர் மலிங்கா அமரசிங்க, மூத்த பேராசிரியர் ராஜ் சோமதேவா, கௌவ பேராசிரியர் சமித மாணவடு, கலாநிதி ரோஸ் சோலங்க ஆராச்சி, களனிப் பல்கலைக்கழக தொல்பொருள் துறையின் கலாநிதி ஸ்ரீயானி ஹத்துருசிங்க, ருஹுணு பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்பொருள் துறை பேராசிரியர் விஜேரத்ன போஹிங்கமுவ, கலாநிதி பி.டி. நந்தேவா, கலாநிதி காமினி விஜேசூரிய, பேராதனை பல்கலைக்கழக தொல்பொருள் துறை கலாநிதி அருண ராஜபக்ச மற்றும் கட்டிடக் கலைஞர் ஹேமந்த குமார பாலச்சந்திர ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி லெப்டினன்ட் கேணல் (ஓய்வு) நந்தசேன கோட்டபய ராஜபக்ச, ஜூன் 2, 2020 அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு இல. 2178/18 மூலம், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தலைவராக, பொலிஸ் தலைவர், முப்படைத் தளபதிகள் மற்றும் புலனாய்வுத் தலைவர்கள் உட்பட 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு 'முழு ஆண்கள்' குழுவை நியமித்தார்.
இலங்கையில் ஒரு நாடு, ஒரு சட்டம் செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்து அதற்கான சட்ட மூலத்தை தயாரிக்கும் நோக்கத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, பொது பல சேனா அமைப்பின் தலைவர் கலபொடஅத்தே ஞானசாரவின் தலைமையில், ஒக்டோபர் 26, 2021 அன்று 2251/30 என்ற அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு மூலம் "ஒரே நாடு, ஒரே சட்டத்தை கட்டியெழுப்புவதற்கான பணிக்குழு"யை நிறுவினார், அதில் தமிழ் பிரதிநிதித்துவமும் இல்லை.


