மலையகம் எமது தாயகம். நாங்கள் எமது தாயகத்தில் இருப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்- வீ.இராதாகிருஸ்ணன்.
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்குத் தயாராக இல்லை!
மலையகம் எமது தாயகம். நாங்கள் எமது தாயகத்தில் இருப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். அதனை விடுத்து, நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்குத் தயாராக இல்லை” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற இயற்கை அனர்த்த நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘சீரற்ற காலநிலையால் மலையகப் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் தோட்டங்களிலிருந்து நகரங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் ஆலயங்களில் இருக்கும் சூழ்நிலையில், இப்போது அவர்களை வீட்டுக்குப் போகுமாறு அரசாங்கம் கூறுகின்றது. அவர்களுக்குத் தேவையான எந்தவிதமான வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்காமலேயே அவர்களைப் போகுமாறு கூறுகின்றனர்.
அவர்கள் இருப்பதற்குத் தகுதியற்ற இடமே அது என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் கூறியதாலேயே அந்த மக்கள் முகாமுக்கு வருகின்றனர். இப்போது அந்த மக்களை போகுமாறு கூறினால் அதன் அர்த்தம் என்ன? முறையாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அறிக்கையைப் பெற்ற பின்னரே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்கள் தொடர்ந்தும் இந்த விடயம் தொடர்பில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, வேவெண்டன் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் காமினி திஸாநாயக்க பாடசாலைகளில் இருக்கிறார்கள். அவர்களை தற்போது வேறு பாடசாலைகளுக்குச் செல்லுமாறு அல்லது தொண்டமான் பயிற்சி நிலையத்துக்கு அல்லது வீடுகளுக்குச் செல்லுங்களெனத் தெரிவிக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த மக்களின் நிலைமையைப் புரிந்து செயற்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் மலையகத்தில் பல பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன’’ என்றார்.


