மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்!
ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடம்பெற்ற இந்த படுகொலை!
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (28) மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள படுகொலை நினைவுத்தூபியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்காக மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் இளையதம்பி திரேசகுமார் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
1987ஆம் ஆண்டு ஜனவரி 27, 28 ஆம் திகதிகளில் அந்த பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது இறால் பண்ணையொன்றில் பணியாற்றிய பணியாளர்கள், முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு, பண்டாரியாவெளி,படையாண்டவெளி, கடுக்காமுனை,கொக்கட்டிச்சோலை அரசடித்தீவு, அம்பிளாந்துறை, கற்சேனை, பட்டிப்பளை, தாந்தாமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டிருந்தனர்.
மறைந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உட்பட சர்வதேச சமூகம் இலங்கை அரசு மீது அவ்வேளை வன்மையான கண்டனத்தை வெளியிட்டிருந்தன.


