சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகம் ஆரம்பம்!
எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (08) கொழும்பு கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் ஆரம்பமானது.
இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த சத்தியாக்கிரகத்தில் சுரேஷ் சலேவின் தாயாரும் பங்கேற்றிருந்தார்.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் சுரேஷ் சலே அந்தத் திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.


